ரவுடி முரளி கொலை வழக்கில் 9 மாதம் தலைமறைவாக இருந்த தட்டாஞ்சாவடி செந்தில் மதுரையில் பதுங்கி இருந்த போது தமிழக போலீசார் உதவியுடன் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் முரளி. இவரும் இவரது நண்பரான சுந்தர் என்பவரும் ஜெகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி விடுதலையாகினர்.
இவர்கள் இருவருக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர்.
அப்போது, இடத்தகராறில் பிரபல ரவுடி தட்டஞ்சாவடி செந்தில் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், முரளியை சுந்தரும் அவரது கூட்டாளியும் கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் செந்தில் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில், 11 பேரை போலீசார் கைது செய்த நிலையில், செந்தில் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை கடந்த 9 மாதமாக போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், அவர் மதுரையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடி படை காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.