
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், மாயமான பள்ளி மாணவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அவரத் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மக்கான் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (40). இவர் டீ கடையில் வேலைசெய்து வருகிறார். இவருடைய மகள் சப்னம் பாத்திமா (13).
இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு காந்திஜி புதுரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சப்னம் பாத்திமா பேப்பர் வாங்குவதற்காக சென்றார்.
பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால, கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனே தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாயமான மாணவியை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி, மக்கான் தெருவைச் சேர்ந்த மக்கள் திண்டுக்கல் அங்கு விலாஸ் இறக்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலாளர்கள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி அங்கு வந்தார். அவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.