
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் ராஜீவ் காந்தி நகர், மேட்டு தெரு, குட்டக்கரை தெரு, பஜார் வீதி, பெருமாள் கோயில் தெரு, பி.வி. களத்தூர் காலனி, புதுப்பாக்கம், திருவாணைக்கோயில், கொள்ளமேடு, கண்டிகை ஆகிய பகுதிகளில் 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
பொன்விளைந்த களத்தூரில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் 40க்கு மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதே பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் உல்லா (எ) சதீஷ் (8). கடந்த ஒரு வாரமாக சதீஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், எவ்வித பலனின்றி நேற்று முன்தினம் சதீஷ் பரிதாபமாக இறந்தான்.
இதேபோல், இருளர் காலனியை சேர்ந்த சாந்தி என்ற மூதாட்டி, மணிகண்டன் என்ற சிறுவன் ஆகியோர் காய்ச்சலால் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துள்ளனர். கடந்த ஒரே மாதத்தில் மர்ம காய்ச்சலால் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை பாலாற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் வாராத நேரத்தில் உள்ளூரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிப்பது இல்லை. அதனை சுத்தம் செய்வதும் இல்லை. இந்த பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரியில் உள்ள தண்ணீரில் மாசடைந்து உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால், அதனை சரி செய்வது கிடையாது.
இதனால், அதில் கழிவுநீர் கலப்பதால், அதை பயன்படுத்தும் மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மர்ம காய்ச்சலால், 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் இறந்துவிட்டனர்.
இறந்த 3 பேரும் எந்த காய்ச்சலால் இறந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட நோயின் விபரம் தெரியாமல் தவிக்கிறோம். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்து, மேலும் காய்ச்சல் பராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.