
பெரம்பலூர்
மனைவியின் இடுப்பி இருந்த கைக்குழந்தை பிடுங்கி ஓங்கி தரையில் அடித்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மகன் பாலு என்கிற பாலமுருகன் (38).
கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகள் வெண்ணிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 2014-ஆம் ஆண்டு பிரதீப் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், பாலமுருகன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டார்.
அதன் விளைவாக 21-12-2014 அன்று இரவு கணவன் - மனைவி இடையே தகராறு முற்றியது இதனால் மனமுடைந்த வெண்ணிலா, பாலமுருகனிடம் கோபித்துக்கொண்டு பிறந்த ஒன்றரை மாத கைக் குழந்தையை 22-12-2014 அன்று காலை வீட்டில் இருந்து தூக்கி கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அவர் பெரம்பலூர் சின்னசேலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தார். பின்னர் அவர் வெண்ணிலாவிடம் தகராறில் ஈடுபட்டு ஊருக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளர்.
ஆனால், இதற்கு வெண்ணிலா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் வெண்ணிலாவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதையடுத்து மனைவியின் இடுப்பில் இருந்த கைக்குழந்தை பிரதீப்பை பிடுங்கி ஓங்கி தரையில் அடித்தார். இதில் குழந்தையின் தலை தரையில் இருந்த கல் மீது பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், "குழந்தையை அடித்து கொலை செய்த பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து" உத்தரவிட்டார். "அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து காவலாளர்கள் பாலமுருகனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாலமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.