நாமக்கல்
பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட விவசாயிகள் தங்களது நெற்பயிருக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்கொடி (பொ) செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.
அதில், "நடப்பு ரபி பருவத்தில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கபிலர்மலை வட்டாரத்தில் கபிலக்குறிச்சி, திடுமல், பெரியசோளிபாளையம், வடகரையாத்தூர், குரும்பலமகாதேவி, சோழசிராமணி, பிலிக்கல்பாளையம் உள்ளட்ட 21 வருவாய் கிராமங்கள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையாக, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,350 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.395 செலுத்த வேண்டும்.
பருவ சூழல் காரணமாக விதைப்பு செய்ய இயலாமல் போவது, பயிர் காய்ந்து போவது, மகசூல் குறைவது, அறுவடைக்குமுன் மழை வெள்ளத்தால் பாதிப்பு உள்ளிட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகள் மேற்கண்ட பிரீமியத் தொகையை அந்தந்தப் பகுதிக்குள்பட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொதுசேவை மையங்களில் செலுத்தலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.