தம்பியின் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற அண்ணன்…

First Published Jan 7, 2017, 9:54 AM IST
Highlights


கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகே தம்பியின் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற அண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 மருமகள்கள் உள்பட மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நல்லூர் கிராமத்தில் முனியம்மாவிற்கு சொந்தமான 1.69 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கடந்த 1986–ஆம் ஆண்டு தானபத்திரம் மூலமாக தனது இளைய மகன் வெங்கட்ரமணப்பாவிற்கு முனியம்மா எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் முனியம்மாவின் மூத்த மகன் முனியப்பன், அவரது மகன்கள் முனிநஞ்சப்பா (51), இலட்சுமப்பா (49) ஆகியோர் போலி பத்திரம் மூலமாக நல்லூர் கிராமத்தில் உள்ள நிலத்தை அபகரிக்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் முனிநஞ்சப்பாவின் மனைவி இலட்சுமம்மா (46), இலட்சுமப்பாவின் மனைவி சுசீலம்மா ஆகிய இரண்டு பேரின் பெயரில் போலி பத்திரம் மூலமாக பதிவு செய்தனர். இவர்கள் இருவரும் முனியப்பனின் மருமகள்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் வெங்கட்ரமணப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனாலும், போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் அதை ஒப்படைக்க மறுத்து வந்தனர்.

இது தொடர்பாக வெங்கட்ரமணப்பா கிருஷ்ணகிரியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவலாளர்களிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் இரவிக்குமார் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் வெற்றிராஜன் விசாரணை நடத்தி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற முனிநஞ்சப்பா, இலட்சுமம்மா, சுசீலம்மா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

click me!