
தமிழகத்தில் சிறுவர்களின் கையில் புத்தகங்களுக்கு பதிலாக பட்டாக்கத்தி, போதைப்பொருள் இருப்பதாகவும், தமிழகத்தின் எதிர்காலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரழித்து விட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு மு.க.ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?
ஸ்டாலின் பெருமை பேசி என்ன பயன்
மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் மு.க.ஸ்டாலின் அவர்களே. கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.