டாக்டர்களை மிரட்டி பணம் பறித்த இன்ஜினியர்கள் கைது...! 

First Published May 16, 2018, 3:04 PM IST
Highlights
Engineers arrested in Chennai


ஆடம்பர வாழ்க்கைக்காக, டாக்டர்களை மிரட்டி பணம் பறித்த இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, கிழக்கு கடற்கரைச்சாலை, உத்தண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் - வைசாலி தம்பதியினர். ஹரீஷ், உத்தண்டியில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். சோழிங்கநல்லூரில் க்ளீனிக் ஒன்றும் நடத்தி வருகிறார். கடந்த 2 ஆம் தேதி அன்று ஹரீசுக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு ஹரீஷ் தன்னிடம், பத்தாயிரம் ரூபாய்தான் இருப்பதாக கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். போலீசிடம் சென்றாலும்
என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த நபர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரீஷ், நள்ளிரவில்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஹரீஷ் மறுநாள் 3 ஆம் தேதி கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது மர்ம நபர் போனில் மிரட்டல் விடுத்ததையும் போலீசிடம் ஒப்படைத்தார்.

ஹரீஷ் அளித்த புகாரின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். ஹரிஷின் செல்போனுக்கு வந்த அழைப்பு எந்த எண்ணில் இருந்து வந்தது. அந்த சிக்னலை வைத்து போலீசார், அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். விசாரணையில் ஹரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சட்டக்கல்லூரி மாணவர் முருகனும் அவரது நண்பர் பாலாஜி என்பதும் தெரியவந்தது.

முருகன், சென்னை தரமணியில் டிப்ளோமா இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது பி.ஏ. கிரிமினாலஜி படித்து வருகிறார். வறுமை காரணமாக கல்வி கட்டணம் கூட செலுத்தாத நிலையில், டாக்டர்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். இவருக்கு உதவியாக பாலாஜியும் இருந்துள்ளார். அதன் மூலம் கார், செல்போன், உடை என ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் வைத்திருந்த செல்போன், கார், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களது மிரட்டலால் பதறும் டாக்டர்களின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் பழக்கம் இவர்களுக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை ஏதேனும் இருக்குமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!