சென்னையின் சுற்றுச்சூழலைக் காக்க விரைவில் “மின்கலப் பேருந்து” என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதற்கான முழுவீச்சில் சென்னை மெட்ரோ போக்குவரத்துக் கழகம் இறங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தநிலையில், பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னே மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கடந்த ஆண்டு அசோக் லேலாண்டு நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்களை தயாரித்தது.
அதில் மினிபஸ்களை சோதனை அடிப்படையில் அசோக் லேலாண்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கி, சென்னை லைட்ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் வரை இயக்கப்பட்டன. இந்த பஸ்ஸின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருந்தது.ஆனால், இந்த பஸ்ஸில் 31 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியவில்லை.
ஆனால், சிறிய அளவிலான பஸ்கள் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் நகரங்களுக்கு சரிவராது என்பதால், பெரிய அளவிலான எலெக்ட்ரிக் பஸ்களை கேட்டு இருக்கிறோம். அந்த வகையான பஸ்களே தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அந்த பஸ்கள் விரைவில் எம்.டி.சி. கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.அதன்பின், எந்த வழித்தடங்களில் இயக்குவது என்று முடிவு செய்வோம். பஸ்களை அறிமுகம் செய்யும் முன், வழித்தடங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இரைச்சல் ,புகை இல்லாத சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத இந்த பஸ்களை இயக்க மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்க வேண்டும். மத்தியஅரசு அளிக்கும் நிதியின் அடிப்படையில், பஸ்களை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.