அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

By Manikanda PrabuFirst Published Dec 12, 2023, 2:25 PM IST
Highlights

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அங்கித் திவாரி என்பவர், மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மிரட்டில் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றபோது, அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

Latest Videos

2024 மக்களவை தேர்தல்: பிரதமர் மோடி, பாஜகவின் கை ஓங்க என்ன காரணம்?

இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்கள், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 1ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரியை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதேசமயம், அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி  திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் ஜாமின் வழங்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

click me!