தமிழகம் முழுக்க கனமழை பெய்வதால், தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுக்கவே காய்கறிகளின் வரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தக்காளி வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கிட்டத்தட்ட கிலோவுக்கு 180 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகியது. பிறகு கடந்த வார இறுதியில் விலை குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. ஆனால், மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது.தக்காளி மட்டுமல்லாமல், பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை 35 ரூபாயாக உள்ளது. அவரைக்காய் விலை 80 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய்,முள்ளங்கி,காளிஃப்ளவர், வெள்ளரிக்காய்,பச்சை மிளகாய்,இஞ்சி என எல்லா காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது.
‘வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி போன்ற காய்கறிகளின் வரத்து வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரம் மெல்ல விலை குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகம் முழுக்க கனமழை பெய்வதால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது. இந்த காய்கறி தட்டுப்பாடு நீங்கி காய்கறிகளின் விலை கட்டுக்குள் வர இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும்’ என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.