தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...! மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் அவசர ஆலோசனை

By Ajmal KhanFirst Published Aug 4, 2022, 1:27 PM IST
Highlights

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தொடரும் கன மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல கர்நாடாகாவில் பெய்துள்ள கன மழை காரணமாக காவிரிக்கு நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக உள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை..

மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் , ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாகவும், கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து  ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கரூர் திருச்சி உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள், மருத்துவ வசதிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்,அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.! காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..பொதுமக்கள் வெளியேற்றம்

தயார் நிலையில் மீட்பு படை

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கவும் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார். அதில் உடனடியாக தேசியபேரிடம் மீட்பு படையினரை தயாராக வைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் வார்த்தை மோதல்...! அதிமுக நிர்வாகிகளுக்கு திடீர் கட்டளையிட்ட ஓ.பன்னீர் செல்வம்

click me!