
தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணித்திற்கு இடையே ஓட்டுநர், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்துவது வழக்கம். அப்போது, பயணிகளுக்கு பொதுவான இடத்திலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் ஸ்பெஷல் சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் டிப்ஸ்சாக 50 ரூபாய் அல்லது வேறு ஏதாவதும் உணவ உரிமையாளர் கொடுப்பார்கள். இதை ஈடு செய்யும் வகையில் பயணிகளிடம் அதிக விலைக்கு உணவு, ஸ்னாக்ஸ் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு புகார்கள் போக்குவரத்து கழகத்துக்கு சென்றது. இதனையடுத்து, அரசு போக்குவரத்துக் கழகம் பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது. பயணிகளுக்கு வழங்கும் அறையிலேயே ஓட்டுநர், நடத்துநருக்கு உணவு வழங்கலாம். ஓட்டுநர்- நடத்துனருக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.