
ஊடகங்களில் வெளியானது போல் நான் யாரிடமும் பணம் பெறவில்லை..யாருக்கும் பேட்டியளிக்கவில்லை என அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகைகளை பெற்றுத் தந்தது சென்னை அரசு மருத்துவர் பாலாஜி.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜெயலலிதாவிடம் கை ரேகை பெற்றது தான்தான் என்றும், நானே அதற்கு சாட்சி என்றும் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் டாக்டர் பாலாஜிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது,
இதையடுத்து ஜெ,விடம் கைரேகை பெற்றுத் தந்ததற்காக பாலாஜிக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 5 லட்சம் ரூபாய் பெற்றது லண்டன் மருத்துவரின் ஹோட்டல் செலவுக்குத்தான் என பாலா பேட்டி அளித்தாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் டாக்டர் பாலாஜி இன்று ஒரு மறுப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
அமைச்சர் விஜய பாஸ்கரிடமிருந்து தான் பணம் எதுவும் பெறவில்லை என்றும் அப்படி பணம் எதுவும் தன்னிடம் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார்,
மேலும் நான் எந்த மீடியாவுக்கும் பேட்டி அளிக்கவில்லை என்றும் டார்டர் பாலாஜி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.