கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்க கூடாது - வங்கிகளுக்கு கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...

First Published May 9, 2018, 10:24 AM IST
Highlights
Do not hold education loan applications - Court stabbed the banks ...


மதுரை 

கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி தொட்டியம்பட்டி கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "எனது மகள் அகிலா. பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். அவரது படிப்புக்காக கோவில்பட்டி பாண்டியன் கிராம வங்கியில் 2016-ஆம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்தேன். 

அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகளின் படிப்பை கருத்தில் கொண்டு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

"மனுதாரர் தனது மகளுக்கு கல்விக்கடன் கேட்டு 2016-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அவரது மனுவை வங்கி நிர்வாகம் ஏற்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. நிலுவையில் வைத்துள்ளனர். 

கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக் கூடாது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை. 

கல்விக்கடன் தொடர்பான வழக்குகளில் விதிகளுக்கு உட்பட்டு கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மனுதாரரின் மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது. எனவே அவரது விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரத்தில் உரிய உத்தரவை வங்கி நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். 
 

click me!