நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளி உணவுகளை கொண்டுவர கூடாது – அரசு மருத்துவமனை அதிரடி…

First Published Oct 6, 2017, 6:41 AM IST
Highlights
Do not bring external foods to visit patients - state hospital action ...


விருதுநகர்

நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளியில் உள்ள உணவகங்களில் இருந்து உணவு கொண்டுவர தடை போடப்பட்டுள்ளது என்று சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரகலாதன் தெரிவித்தார்.

சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரகலாதன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், “சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆண்கள், பெண்கள் பிரிவு,  குழந்தைகள் பிரிவிலும் காய்ச்சல் தொடக்க நிலையில் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தனி வார்டில் 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாள்தோறும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஒரு வேளை காய்கறி சூப்,  மற்றும் பப்பாளி இலை கஷாயம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பிற்பகல் உணவாக அரிசி கஞ்சி, இரவு உணவாக கிச்சடி,  சுண்டல் வழங்கப்படுகிறது.

நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்கள் வெளியில் உள்ள உணவகங்களில் இருந்து உணவு கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் தயாரிக்கப்படும் வடை உள்ளிட்ட பதார்த்தங்களை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணக் கூடாது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அரசு மருத்துவமனையில் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறி சூப் மற்றும் பப்பாளி இலை கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.  

தற்போது இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேர் உள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு இரத்ததில் தட்டணுக்கள் குறைவாக உள்ளது. எனவே டெங்கு காய்சல் வராமல் இருக்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருந்த சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டான். காய்ச்சல் பாதிப்பு உள்ளனவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தலைமை மருத்துவர் பிரகலாதன் தெரிவித்தார்.

click me!