
திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி (79) உடல்நலக்குறைவால் காலமானார்.
டி.ஆர்.பாலு மனைவி மறைவு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு இரண்டு மனைவிகள். ரேணுகா தேவி என்பவரும் மற்றொரு மனைவியாக டி. ஆர். பி. பொற்கொடி என்பவரும் உள்ளார். டி. ஆர். பாலுவுக்கு மூன்று மகன்கள் (ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு) மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரேணுகா தேவி கடந்த 8 மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இன்று மாலை இறுதி சடங்குகள்
இந்நிலையில் நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முன்னோடிகளுடன் நெருக்கமாக பழகி வந்த ரேணுகாதேவி, கட்சித் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்பு மிக்கவராக இருந்தார். அவரின் மறைவு திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியையும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகர் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.