
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்பி சைக்கிளில் ரோந்து வருவதால் கிலி அடைந்துள்ள கிரிமினல் ஓடி ஒளிய ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றசெயல்கள் அதிகரித்து வண்ணம் உள்ளதாக புகார்கள் எழுந்தன. அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் கொலைகள் நடப்பது, பழிக்கு பழி சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் அதனை ஒடுக்கும் வண்ணம் மாவட்ட போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.
அதில் முக்கிய அம்சமாக மாவட்ட எஸ்பி சீனிவாசன் தற்போது நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் இறங்கி உள்ளார். மற்ற அதிகாரிகள் போல கார்களில் சைரன் ஒலிக்க பறப்பது கிடையாது. மாறாக அவர் செய்த ரோந்து பணியில் தான் சிறப்பு அம்சமே அடங்கி இருக்கிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து எஸ்பி சீனிவாசன் சைக்கிளில் ரோந்து சென்றார். நகரின் முக்கி வீதிகளில் சைக்கிள் ஓட்டியவாறு அவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். கடைவீதி, நாகல்நகர், பழனி சாலை என முக்கிய பகுதிகளில் அவர் வலம் வருவதால் கிரிமினல்கள் தெறித்து ஓடி ஒளிய ஆரம்பித்துள்ளனர்.
பொதுஇடங்களில் மதுபானம் அருந்துவதை கண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி சீனிவாசன் எச்சரித்துள்ளதால் குடிமகன்களும் அதிர்ச்சியில் உள்ளனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கால்நடையாக கிட்டத்தட்ட 15 கிமீ காவலர்களுடன் அவர் ரோந்து பணியில் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.