தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் டிச. 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை திங்கள் கிழமை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இத்துடன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு மற்றும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் மீதான விசாரணைகள் இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றன.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அவைத்தலைவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தைப் பதிவு செய்தார். அப்போது ஓபிஎஸ் தரப்பு அணி தனியாக இருந்து, இரு அணியாகப் பிரிந்து இருந்ததால், நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது என விளக்கம் கூறினார்.
இதை அடுத்து, இந்த வழக்கு வரும் டிச.6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் விவாதம் வரும் 7,18, 19, 20ஆம் தேதிகளில் தொடர்ந்து நடக்கும் என நீதிபதி கூறினார்.