ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐடி ஊழியர்கள் 15 பேர் காயமடைந்தனர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் ஐடி நிறுவனம் ஒன்று உள்ளது. பன்னிரெண்டு மாடி கட்டடத்துடன் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தற்போது 13-வது தளம் கட்டப்பட்டு வருகிறது. 13-வது தளம் கட்டும் பணியில் 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று மதியம், இரண்டு ராட்சத கிரேன்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
கீழே விழுந்த கிரேன்கள், அங்கு நின்றிருந்த வேன் மீது விழுந்தது. இதில் வேன் நசுங்கியது. மேலும் வேனில் இருந்த ஐடி ஊழியர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.