
திருவாரூர்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்துள்ளார்..
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில், பொது சுகாதாரத் துறையின் சார்பில் நேற்று நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கித் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் நடத்திய ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் இரா.காமராஜ் கூறியது:
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு டெங்கு ஒழிப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் உள்ள் அனைத்துப் பகுதிகளிலும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, அதன்படி டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாள்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
மக்கள் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் என்றாலே உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவனைக்குச் சென்று இரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 58 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது.
மக்கள் அரசின் டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.