
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு பணிமனையின் மேற்கூரை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 போக்குவரத்துக்குக ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடட்த்தை மாற்ற வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த பணிமனையில் இரவு ஷிப்ட் முடிந்து பேருந்துகளை நிறுத்திவிட்டு 20 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் இந்த பணிமனை, கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் சிக்கியிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். காயமடைந்த அவர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பிவைக்கப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாளிக்காக அப்பகுதியில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால்தான் பழமையான கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 7 ஆம் தேதி கோவை மாவட்டம் சோமனூர் பேருந்த நிலையம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.