
தமிழக அரசு சார்பில் கலைத்துறையில் சாதனைப்படைத்த நபர்களை கௌரவிக்கும் வகையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் வள்ளி கும்மி ஆட்டத்தை தொடர்ந்து பிரபலப்படுத்தி வரும் கேகேசி பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வள்ளி கும்மி என்ற பாரம்பரியக் கலையில் உலக சாதனைப் படைக்கும் வகையில் பாலு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவர் ஏற்பாடு செய்த வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சியின் போது இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் சார்ந்த சமூகத்திலேயே திருமணம் செய்து கொள்வேன் என்று சத்தியம் பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகிக்கும் பாலுவுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. கேகேசி பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் ஒரு சாதியவாதி, சாதி பெருமைக் கொண்டவர், வள்ளி கும்மியாட்டம் என்ற பெயரில் சாதியை வளர்க்கக் கூடியவர் என்று இணையதளங்களில் கண்டனங்கள் வலுத்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தொடரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை குஷி படுத்துவதற்காகவே அக்கட்சியின் பொருளாளருக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் எதிர்ப்புகள் பரவி வருகின்றன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன் சாதி பெருமைகளைப் பாடி வரும் கேகேசி பாலுவுக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டுள்ளது, அவ்விருதுக்கு இழிவை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அறிவிக்கப்பட்ட விருதை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.