சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் கத்தி, கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது.
இதையடுத்து இருவரையும் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரும் தான் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். பிடித்துச் சென்றவர்களை இரவில் விசாரணை நடத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் விக்னேஷ்க்கு காலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், காவல்துறையினர் விக்னேஷின் உடலை அவர்களே புதைக்க முயற்சிப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.