டிச.3ம் தேதி தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்.. எந்தெந்த இடங்களில் மிக கனமழை பெய்யும்?

By Ramya sFirst Published Nov 30, 2023, 1:32 PM IST
Highlights

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு அந்தமான பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புயல் டிசம்பர் 2-ம் தேதி உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்றும் வானிலை மையம் உறுதி செய்துள்ளது. டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி இந்த புயல் வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2,3, 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை மிரட்டிய கனமழை.. அவசர உதவிக்கான வாட்ஸ் ஆப் நம்பர் இதுதான்.. மாநகராட்சி அறிவிப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்.” என்று தெரிவித்தார். 

click me!