
புதுக்கோட்டை
ஜெயலலிதா இருந்தபோது நடந்ததை விட மோசமாக தற்போதைய தமிழக அரசு நடந்து வருகிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
புதுக்கோடையில் செய்தியாளர்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியளித்தார். அதில், “தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் மோசமாக நடந்து வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது நடந்த அரசை விட மோசமாக தற்போதைய அரசு நடந்து வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கவில்லை என்றால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். உடனடியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தால் நல்லது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த மூன்று தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்.
அதிமுக தற்போது மூன்று அணிகளாக உள்ளது. சிறிது காலத்தில் இது ஐந்து அல்லது ஆறு அணிகளாக கூட மாறலாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலின்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக திறம்படச் செயல்பட்ட மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேலிடத்தில் புகார் செய்யப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான். ஆனால் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.