அதிர்ச்சி: விளைநிலங்களை வாங்கும் பெருநிறுவனங்கள்; மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விவசாயம்...

First Published May 31, 2018, 9:41 AM IST
Highlights
Corporations buy farmland Farming in genetically modified seeds


காஞ்சிபுரம்

விவசாய நிலங்களை வாங்கி பெருநிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றனர் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் ஆட்சியரிடம், ஐயாக்கண்ணு மனு கொடுத்தார். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விவசாயம் செய்வதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

அதனொரு பகுதியாக அவர் நேற்று காஞ்சிபுரத்துக்கு வந்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு கொடுத்தார். 

அந்த மனுவில், "விவசாய விளைபொருள்களுக்கு இலாபகரமான விலையை அளிக்காமலும், சாகுபடி செய்ய நீரை வழங்காமலும் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றுவதால் விவசாயிகள் வாங்கிய கடனைச் செலுத்த முடியவில்லை. 

விவசாய நிலங்களை விற்கும் சூழல் ஏற்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி பெருநிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கி விடுகின்றன. 

அதோடு, பெட்ரோல், மீத்தேன், ஐட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்து, நிலத்தடி நீர்மட்டத்தை 2000 அடிக்கு கீழே கொண்டு போகச் செய்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால், தமிழக விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும். 

அதேபோல, வாங்கிய விவசாய நிலங்களில் பெருநிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றனர். அதன்மூலம், 50 சதவீத பேர் ஆண்மை இழப்பு, பெண்களில் கருத்தரிப்பு சக்தி இழப்பு ஆகியவை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விவசாயம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை வித்க்க வேண்டும்.  மேலும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 

அதோடு, ஆறுகளில் தடுப்பணையும், ஏரி, குளம், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அழிக்கவேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி, வீணாக அரபிக் கடலில் கலக்கும் தமிழக நதிகளை தமிழகத்துக்கு திருப்பி விட வேண்டும். 

கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, இழப்பீடு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் வழியாகச் செல்லும் பாலாற்றில் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். 

அதோடு, மதுராந்தகம், களத்தூர், வளையாபுத்தூர், எடையாளம், ஆத்தூர், மொரப்பாக்கம், தொழுபேடு, மேட்டுப்பாளையம், ஒரத்தி, கொங்கரை மாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளைத் தூர்வார வேண்டும். 

தொழுபேடு முதல் சூணாம்பேடு, ஒரத்தி சாலைகளைச் சீரமைத்து, இரு புறங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், சீனிவாசபுரம் பகுதியில் கரையை உயர்த்தி தூர்வார வேண்டும். 

செம்பை நெல் சாகுபாடிக்கு மானியத்தில் இருந்து 15 சதவீதம் பிடித்துக் கொள்வதை தடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஐயாக்கண்ணு, ஆட்சியரிடம் மனு அளித்தபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் தீனன், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

click me!