சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிப்பதாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு- நிதி உதவி
சென்னை வெள்ள பாதிப்பகளில் இருந்து மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வெள்ள நிவாரணம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்,
மீட்பு பணியில் தமிழக அரசு
மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில்; சிறப்பான முறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு,
ஒரு மாத ஊதியம் - காங்கிரஸ் எம்எல்ஏ அறிவிப்பு
படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்