
தூத்துக்குடி
கயத்தாறு சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை காங்கிரசு கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கயத்தாறு அருகே வில்லிசேரி – தளவாய்புரம் இடையே நாற்கர சாலையில் உள்ள பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுமான விதிகளின்படி பணிகள் நிறைவு செய்யாததால், அந்த பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 40–க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
கடந்த வாரம் இந்த பாலத்தின் ஓடைக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். எனவே, பாலங்களில் முழுமையாக பணி நிறைவு பெறாமல், கயத்தாறு சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது.
அங்கு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தளவாய்புரம் நாற்கரசாலையில் சிவஞானபுரம், நாகம்பட்டி பிரியும் நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரசார் நேற்று இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன்,
மருத்துவ பிரிவு தலைவர் மருத்துவர் கலையரசி, மகளிர் அணி நல்லமதி, நகர தலைவர் சண்முகராஜா, துணை செயலாளர் பிச்சைகனி, முன்னாள் கவுன்சிலர் மதி உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள், உதவி ஆட்சியர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், "மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 1–ந்தேதி காலை 10 மணிக்கு தளவாய்புரம் நாற்கர சாலை சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.