கார்கள் மாறி மாறிப் சென்று சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி! ஆர்.எஸ்.பாரதி விளாசல்!

Published : May 27, 2025, 08:24 AM IST
rs bharathi

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் செயல்களை சினிமா நகைச்சுவை காட்சிகளுக்கு ஒப்பிட்டுள்ளார்.

சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள்

நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ’ஸ்கோப்’ இருக்க, ’பயோஸ்கோப்’ காட்டிக் கொண்டிருக்கிறார் ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி. நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார்? என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்குத்தான் தமிழ்நாட்டின் எத்தனை கிளைக் கழகங்கள்?

பழனிசாமியின் காமெடி கதறல்கள்

எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை(?) பார்க்கும்போது, ’’ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா’’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன. ’’நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்’’ எனப் பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தெருமுனை என பழனிசாமி புலம்பியதை எல்லாம் கணக்கிட கால்குலேட்டரே திணறும்! நிரந்தர பொதுச் செயலாளர் என எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகட்டிக் கொண்டு போனவர் யார்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் இருக்கையை அபகரித்த அபகரிப்பாளர் அல்லவா பழனிசாமி. மார்ச் 25-ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் கூட டெல்லிக்கு அவசரமாகச் செல்லும் அளவுக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு என்ன வேலை இருந்தது? டெல்லியில் எதற்காக டீல் போட்டார்?

மூன்று கார்களில் மாறி மாறிப் போனார்?

"இபிஎஸ் யாரைச் சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படிச் சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். பழனிசாமி செய்தாரா? இல்லையே. “பிரத்தியேகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தைப் பார்வையிடவே வந்துள்ளேன்” எனப் பொய் முலாம் பூசியவர்தானே பழனிசாமி. டெல்லியில் உள்ள அண்ணா திமுக அலுவலகத்துக்கு ஒழுங்காக வெள்ளை அடித்திருக்கிறார்களா? எனப் பார்க்கப் போனவர், ஏன் மூன்று கார்களில் மாறி மாறிப் போனார்? ‘சாமி’ திரைப்படத்திற்கும் ’பழனிசாமி’ கேரக்டருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் இந்தச் சமூகம் நம்ப வேண்டும். சாமி படத்தின் வில்லன் பெருமாள் பிச்சை கதாநாயகனிடம் இருந்து தப்பிக்க கிளைமேக்ஸில் கார்கள் மாறி மாறிப் போவார். அந்த பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி.

அதிமுக – பாஜக கூட்டணி

அன்றைக்கு டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே, "2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ட்வீட் போட்டாரே! பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை தவழப்பாடியார் மறந்துவிட்டாரா? அமித்ஷா சந்திப்பு பற்றி அடுத்த நாள் 26/3/25 அன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘’தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றிப் பேச எந்த அவசியமும் இல்லை” என சூனாபானாவாக முழங்கிவிட்டு, 11/4/25-ம் தேதி அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. அப்போது அமித்ஷா பக்கத்தில் அமர்ந்திருந்த சூராதி சூரர் யார்? இதுதான் பழனிசாமி சொன்ன ஓராண்டுக் காலமா? பச்சைப் பொய் பழனிசாமி என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமி

முதலில் ’அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன்’. பிறகு ’மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன்’ என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது. இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு பற்றி நேரடியாக வலியுறுத்தி இந்திய மக்கள் முன் எடுத்து வைக்க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், அதைத் திரித்து தனது அவதூறு அரசியல் குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாடு அரசு மீதும் முதலமைச்சர் மீதும் களங்கம் கற்பித்துவிடலாம் என பழனிசாமி போட்ட கணக்கெல்லாம் தப்புக்கணக்கு ஆனதால், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலச் சமாளிக்க நீங்கள் போடும் வேடங்கள் உங்களை இன்னும் தோலுரிக்கின்றன. ’பில்ட்டிங் ஸ்டராங்க் பேஸ் மட்டம் வீக்’ என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர்.

அடிப்படை அறிவுகூட இல்லை

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறி கொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் ’பாதந்தாங்கி’ பழனிசாமிக்கு அடிப்படை அறிவுகூட இல்லை. தனது ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் புரளிகளை அள்ளிவிட்டு குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் அராஜகத்திற்குக் குட்டு வைத்து இடைக்காலத் தடை விதித்ததும் தனது டெல்லி ஓனர்களோடு சேர்ந்து, தான் ஓட்டிய பித்தலாட்டப் புரளி படம் ‘Flop’ ஆன விரக்தியில் இப்போது வாய்க்கு வந்ததை உளறித் திரிகிறார். தனது ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்கிற வெட்கமே இல்லாமல் திமுக வை குற்றம் சாட்ட நா கூசவில்லையா?

டெல்லி டீலிங்

தனது உறவினர்களுடைய வீட்டில் நடந்த ரெய்டுகளுக்கு பயந்துதான் பாஜகவின் பண்ணையடிமையாக பழனிசாமி மாறினார். அதற்காகத்தான் அதிமுகவை பாஜக கூட்டணியில் அடமானம் வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் அறியாத பிள்ளைகளுக்கு இந்த உண்மைத் தெரியும், 23-ம் புலிகேசியாக வாழும் தொடைநடுங்கி பழனிசாமி, ’ரெய்டைப் பார்த்து எனக்குப் பயமா?” என வீர வசனம் பேசுவதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகும். தனது உறவினரின் ஊழலுக்குச் சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார் பழனிசாமி, 650 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் எனும் ஊழல் குற்றச்சாட்டை “Discrepancies” என்கிறாரே பழனிசாமி ஊழலை “Discrepancies” என மாற்றுவதற்குத்தான் டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவை சந்திக்கச் சென்றாரா? பூனைக்குட்டி வெளிய வந்துவிட்டது என்பது போல அதிமுக வை அடகு வைத்ததற்கான டெல்லி டீலிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி.

மோடி அரசுக்கு சர்ட்டிபிகேட்

நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல - உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. அதாவது மோடி அரசுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார். மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவைச் சேர்ந்த பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் போன்றவர்கள் மீதான அமலாக்கத் துறை வழக்குகளை எல்லாம் பாஜக வாசிங் மிஷின் எப்படி சுத்தப்படுத்தியது. அந்த வாசிங் மிஷினில் விழுந்தவர்தானே பழனிசாமி அன் கோ. அதன் மூலம் தன் உறவினர்கள் மீதான வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்ய அதிமுக என்ற ஆலமரத்தையே கோடாரியாகப் பயன்படுத்தினார்.

அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம் என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே. தவழப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் ஒய்யால என்ன மாதிரி கூவுறான் என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது. தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Tamil News Live today 07 January 2026: இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பு