
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், ''பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை. ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள்
வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்திட வேண்டும். பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாகச் சீர் செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
பள்ளி குடிநீர் தொட்டி சுத்தமாக இருக்க வேண்டும்
மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாகக் கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்துதல் அவசியம். இவைகளை விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தினை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி இல்லா வளாகமாக (Plastic Free School) மாற்றத்தக்க வகையில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு
திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகா வண்ணம் மூடிட நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றித் தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும் பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பாகப் பயில தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
பழுதடைந்த கட்டடங்களை சரி செய்ய வேண்டும்
பள்ளி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச் சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.
மாணவர்களின் சுத்தம் முக்கியம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவகையில் போதுமான அளவில் சோப்பு / சோப்புக் கரைசல் வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன் மரங்கள் எளிதில் விழாத வண்ணம் உள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும்.
மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம்
மாணவர் சேர்க்கை அரசாணை எண்.81, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள்.15.03.2024, இன்படியும் மாணவர் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றிடவும், தேவையான நடவடிக்கையை பள்ளித் தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்படவேண்டும்.
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்
குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்திட ஆசிரியர்கள் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் அவசியம். 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9ஆம் வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும். எனவே அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசாணையின்படியும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இம்மாணவர் சேர்க்கையில் சிறப்பு கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதைப் பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
காலை உணவை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்
மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்களையும் பள்ளி வாரியாக நடத்திடவும் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்துச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்கள் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 2025-26ஆம் கல்வியாண்டிற்குரிய நலத்திட்டங்கள் வழங்குதல் சார்ந்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி வழங்கப்பட வேண்டும்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் காலை உணவு குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.