கீழடியில் 9வது கட்ட அகழ்வாய்வு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By SG BalanFirst Published Apr 6, 2023, 11:22 AM IST
Highlights

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை 9வது கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று தொடங்கியுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீழடியில் 9வது கட்ட அகழ்வாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். கீழடியில் மட்டுமின்றி அருகில் உள்ள அகரம், கொந்தகை ஆகிய இடங்களிலும் 9ஆம் கட்ட அகழ்வாய்வு இன்று தொடங்கியுள்ளது.

இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில், ஒன்பதாவது கட்ட அகழ்வாராய்ச்சி இன்று தொடங்கி இருக்கிறது. தொல்லியல் துறை ஆணையர் (பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொள்ள உள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000... அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்.

கடந்த மார்ச் 5ஆம் தேதி கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களுக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 2 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் செட்டிநாடு கட்டடக்கலை பாணியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை மார்க்கத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் தடங்களை அனைவரும் பார்வையிடலாம். 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் உருவங்கள், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகத் தொடரப்பட்ட 14 வழக்குகள் தள்ளுபடி!

click me!