இன்று மாநகராட்சிகளாக தரம் உயரும் 4 நகராட்சிகள் எது தெரியுமா.? புதிய திட்டங்களோடு தொடங்கி வைக்கும் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Aug 12, 2024, 10:10 AM IST
Highlights

தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகியுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கவுள்ளார். 

தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள்

மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் மிகப்பெரிய பேருராட்சியாக இருப்பதை நகராட்சியாகவும், நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுப்பார்கள். மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும். 

Latest Videos

நகராட்சி டூ மாநகராட்சி

அந்த வகையில் நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து சட்டசபையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து ஆளுநர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காரைக்குடி மாநகராட்சியில் கோட்டையூர், கண்டனூர் பேரூராட்சிகளும், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர், சங்காபுரம், கோவிலூர் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

இணைக்கப்படும் ஊராட்சிகள் என்ன.?

இதே போல நாமக்கல் நகராட்சியுடன் வசந்தபுரம், வேட்டம்பாடி, மசூர்பாடி, லத்துவாடி,  வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, சலுவம்பட்டி, தொட்டிப்படி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகராட்சியுடன் வாகவாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், வெள்ளனூர், திருவேங்கைவாசல், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

இதனையடுத்து திருவண்ணாலை நகராட்சியோடு பல்வேறு ஊராட்சிகள் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த புதிய மாநகராட்சியை காணொளி மூலம் தொடங்கிவைக்கிறார். அப்போது புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட உள்ள 4 மாநகராட்சிகளுடன் இணைய உள்ள பகுதிகள் என்னென்ன? முழு விவரம்..


 

click me!