சென்னையைச் சேர்ந்த 2 ரவுடிகள் கொத்தி குதறி ஆந்திர எல்லையில் வீச்சு…. எதிர் கோஷ்டி ரவுடிகளின் வெறிச்செயல்…

First Published May 14, 2018, 10:41 AM IST
Highlights
chennai rowdies murder and body laid in andra


சென்னையைச் சேர்ந்த 2 பிரபல ரவுடிகளை மர்ம நபர்கள் கொலை செய்து ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள முட் புதரில் வீசிச் சென்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் குடிபாலா  என்ற இடம் அருகே சாலை ஓரம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முட்புதரில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் கிடப்பதாக குடிபாலா போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற ஆந்திர போலீசார், 2 பேரின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்களில் பயங்கர வெட்டுக்காயங்கள் இருந்தன.

இருவரையும், தமிழகத்தில் மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து, வாகனத்தில் பிணங்களை ஏற்றி, இங்கு கொண்டு வந்து முட்புதரில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இது தொடர்பாக குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இது பற்றி ஊடகங்களில் செய்தி பரவின. போலீசாரின் விசாரணையில் 2 பேரும் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகளான அசோக் மற்றும்  கோபி  என்பது தெரியவந்தது. இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் இருவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சித்தூருக்கு வந்தனர்.

சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த இருவரின் உடல்களை உறவினர்கள் பார்வையிட்டு, இறந்தவர்கள் அசோக், கோபி என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து 2 பிணங்களையும் பிரேத பரிசோதனை செய்த பிறகு, உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இறந்த ரவுடிகளில் ஒருவரான அசோக் சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர். அவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மற்றொருவரான கோபி சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முன்விரோதம் காரணமாக சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் யாரோ இருவரையும் கொலை செய்து, பிணங்களை வாகனத்தில் கொண்டு வந்து, குடிபாலா அருகே முட்புதரில் வீசி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

click me!