Chennai Police: மாஸ்க் அணியாத மாணவரை அடித்து.. முகத்தில் சிறுநீர் கழித்து போலீசார் சித்ரவதை.. வைரல் வீடியோ

By manimegalai aFirst Published Jan 16, 2022, 7:51 PM IST
Highlights

சென்னையில் மாஸ்க் அணியவில்லை என்று கூறி சட்ட கல்லூரி மாணவரை அடித்து அவரது முகத்தில் போலீசார் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியவில்லை என்று கூறி சட்ட கல்லூரி மாணவரை அடித்து அவரது முகத்தில் போலீசார் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் காவல்துறைக்கு எதிரான கூக்குரல்கள் இன்றும் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. லாக்கப் மரணங்கள், பெண்களிடம் காவல்துறையினரே அத்துமீறி நடந்து கொள்ளுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறையினர் இன்னமும் ஆளாகின்றனர்.

தினசரி நடக்கும் குற்ற செயல்களை விட காவல்துறையினர் செய்ததாக கூறப்படும் தவறுகள், விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களிடம் அவர்கள் காட்டும் அணுகுமுறை, சித்ரவதை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்போது லேட்டஸ்ட்டாக சர்ச்சையில் சிக்கி இருப்பது சென்னையில் கொடுங்கையூர் போலீசார்… சட்ட கல்லூரி மாணவரை ஸ்டேஷன் அழைத்து சென்று அடித்து உதைத்து, முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்துள்ளனர் என்பது புகாராகும்.

அதன் முழு விவரம் வருமாறு: வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ரஹீம். தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தின் 5ம் ஆண்டு சட்டமாணவர். பட்டப்படிப்புடன் பார்ட் டைம் வேலையும் பார்த்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து அவர் வீடு சென்று கொண்டிருந்ததார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மாஸ்க் போட்டு இருந்தும், அதை அணியவில்லை என்று கூறி அபராதம் கட்டுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் ரஹீம் அதற்கு மறுத்துவிடவே, வாக்குவாதம் முற்றி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் போலீசாரை அடிக்க முயன்றதாக கூறி ரஹீமை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற காவலர்கள் நைய புடைத்துள்ளதாக தெரிகிறது. இதுபோதாது என்று ஆடைகளை களைந்து அவர் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் தாக்குதல் மற்றும் சித்ரவதையில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாகவும் ரஹீம் தெரிவித்துள்ளார். ராத்திரி 1 மணி முதல் காலை 11 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர் என்று அவர் கூறி உள்ளார்.

இந்த விவரங்களை அறிந்து அப்துல் ரஹீமை மீட்க அவருக்கு வேண்டியவர்கள் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையிடம் நடந்த சம்பவங்களை அறிந்து அவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதுபற்றிய வீடியோவை விசிகவின் வன்னி அரசு தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் அப்துர் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் தாக்கி,முகத்தில் சிறுநீர்கழித்து ரவுடித்தனம்.

ரவுடிகளை பிடிக்கச்சொன்னால் மாணவர்களை சித்ரவதை செய்வதா? ரவுடித்தனம் செய்த போலீசார் இடமாற்றம் ஏமாற்றுவேலை!பணிநீக்கம் செய்க!உடனே மாணவரை விடுதலை செய்க! என்று குறிப்பிட்டுள்ளார்.

"

click me!