3 மணி நேரம் தண்ணீரில் மிதந்த சடலம்..மீட்க சென்ற போது அதிர்ச்சி.. குடிமகன்களின் தொடரும் அட்ராசிட்டிகள்..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 7:39 PM IST
Highlights

திண்டுக்கலில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த குடிமகன் ஒருவர், காவல்துறையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் திடீர் அச்சத்தில் உறைய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
 

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வணிக வளாகம், தியேட்டர், இறைச்சி மற்றும் மீன் கடை, காய்கறி மார்க்கேட் உள்ளிட்ட அனைத்தும் இன்று அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுக் கடைகளும் இன்று செயல்பட அனுமதி கிடையாது.

இருந்தும் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த குடிமகன் காவல்துறையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் திடீர் அச்சத்தில் உறைய வைத்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. பாலத்தின் அடியில் தண்ணீரில் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து மீட்க சென்ற போது, குடிபோதையில் தண்ணீரில் சடலம் போல் கிடந்த அந்த நபர் திடீரென்று நீந்திக் கொண்டே வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆலகுவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையான அவர் இன்று மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து சீலபாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது விற்ற நபர்களிடம் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு அருகே இந்த ஓடை பாலத்தில் அமர்ந்து இருக்கிறார்.

அப்போது போதை தலைக்கேறியதால் தடுமாறிய முருகவேல், பாலத்துக்கு கீழே விழுந்துள்ளார். மேலும் அவர் சாலை முழுவதும் தண்ணீர் இருப்பதாக கற்பனையாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ள சம்பவம் சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.சுமார் மூன்று மணி நேரமாக மிதந்த முருகவேலை கள்ளச்சந்தையில் மது வாங்க வந்திருந்த மற்றொரு நபர் பார்த்துள்ளார்.

மேலும் அந்த நபர் ஓடை பாலத்தின் அடியில் சுயநினைவின்றி கிடந்த முருகவேலை, சடலமென்று கருதியோடு நில்லாமல், ஒரு உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்க முயற்சி செய்தபோது பெரும் சத்தத்துடன் தண்ணீரில் நீந்திக் கொண்டே ஓடை பாலத்தின் அடியில் இருந்து இறந்ததாக கருதப்பட்ட அந்த உடல் வெளியே எட்டிப்பார்த்தது அதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து தாடிக்கொம்பு அருகே உள்ள ஆலக்குவார்பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்றும், இவர் தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து முருகவேலின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஆனால், குடிபோதையில் பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த நபரை உயிரிழந்ததாக நினைத்து மீட்க வந்த தீயணைப்பு துறையினர், அருகே இருந்தவர்கள் உயிரிழந்தவர் தான் எழுந்து வருகிறார் என நினைத்து மிரண்டு விட்டனர் என்பது தான் இதில் ஹை லைட்...

click me!