
சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் சுமார் 133 கிமீ தூரம், 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது மழை பெய்ய தொடங்கிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள் குறித்த வரைபடங்களுடன் அதிகாரிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு விளக்கி எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருச்சியில் இருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு அடைந்தாலும், செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வந்து சேர மேலும் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், சென்னைக்குள் வர போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாகவும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக போக்குவரத்தை சீர் செய்ய முறையான திட்டங்கள் ஏற்படுத்தவில்லை என கூறினார். சென்னைக்கு உள்ளே வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் தனியே திட்டம் வகுத்து வருவதாகவும், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் இந்த சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் உலகத்தரத்தில் 6 வழி பாதைகளாக மாற்றப்பட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்றார். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக களத்திற்கே வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு, மணல் குவாரிகள் திறப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து ஆதார் அர்ஜுனா புறப்பட்டு சென்றார். மேல்மட்டங்களில் இல்லை என்று சொல்வதை விட ஊழல் ஒழித்தாகிவிட்டது எனவும், கீழ் மட்டத்தில் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.