
2213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை 11ம் தேதி விடுமுறை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு - எதற்கு தெரியுமா?
தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம்.தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பேருந்துகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் காலரா.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ள போதும், இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் இந்த டெண்டர் நடவடிக்கைகளை தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை பின்பற்றியே பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளையும் கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.