
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாகவே புயலின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக கனத்த மழையை சென்னை கண்டுள்ளது என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் நேற்று சென்னையில் பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் சூறைக்காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஒருபுறம் என்றால் செல்போன் சிக்னல்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பொது இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் பகுதிகளில் இன்னும் இணைய சேவை செயல்பாட்டில் இல்லை என்கின்ற தகவலை அளித்து வருகின்றனர் இணையவாசிகள். கடும் மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக செல்போன் டவர்கள் பாதிப்பு அடைந்திருக்கலாம் என்றும் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்துவிட்ட தலைநகர் சென்னையில் இணைய சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது பலரினுடைய அன்றாட பணிகளை பெரிய அளவில் பாதித்துள்ளது என்றே கூறலாம். உடனைடியாக சம்மந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.