பாலில் கலப்படத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 24 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு சில தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பகீர் குற்றசாட்டை எழுப்பினார்.
மேலும் பாலை புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து புனேவின் ஆய்வு மையம் எந்த பாலும் எங்களிடம் பரிசோதனைக்கு வரவில்லை என தெரிவித்தது. இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றசாட்டுக்களை எழுப்பினர்.
இதனிடையே பாலில் கலப்படம் செய்வதாக குற்றசாட்டை பதிவு செய்யும் அமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாலில் கலப்படத்தை தடுக்க கோரியும் சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பாலில் கலப்படத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 24 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.