மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விமானத்தில் பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 93 பேர் பயணம் செய்து உள்ளனர்.
மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏா்இந்தியா விமானம், மதுரையிலிருந்து இன்று பிற்பகல் சென்னை புறப்பட்டது.அந்த விமானத்தில் 93 பேர் பயணம் செய்தனர். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. சென்னை விமானநிலையம் வந்தடைந்த நிலையில், பயணிகளுள் ஒருவர் விமானத்துக்குள்ளே மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானத்திற்குள் உயிரிழந்த அந்த நபர், மதுரையை சோ்ந்த சோமசுந்தரம் என்பதும் தெரியவந்துள்ளது.
விமானம் தரையிறங்கி, அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து தரை இறங்கிய நிலையில் இவர் மட்டும், எழாமல் தனது இருக்கையில் தூங்குவது போல் இருந்துள்ளார். இதனால், விமான பணிப்பெண் அருகில் சென்ற பார்த்த போது, சுயநினைவில்லாமல் இருப்பது தெரிந்துள்ளது. இதனையடுத்து, விமானத்திற்கு மருத்துவர் வரவழைக்கபட்டு பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்துள்ளது.
உடனடியாக சென்னை விமானநிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாா் விரைந்து வந்து உடலை விமானத்திலிருந்து கீழே இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். இதனிடையே விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போதே பயணி மரணித்த சம்பவம் சக பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மும்பை செல்லும் விமானம் 2 மணி நேரம் தாமதமாக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து மும்பை செல்லும் இந்த ஏா்இந்தியா விமானத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கினைப்பாளருமான ஒ.பன்னீா்செல்வம் உட்பட 93 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த விமானம் இன்று மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 115 போ் பயணிக்க இருந்தனா். ஆனால் பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்துவிட்டதால், விமானத்தை மும்பைக்கு இயக்க விமானி மறுத்துவிட்டாா். இதையடுத்து விமானம் முழுமையாக கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்பு 115 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனா். விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.