
CBI investigation into Ajith Kumar murder case : திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரனைக்கு தனிப்படை காவலர்களால் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து. கடந்த 14 ஆம் தேதி முதல் டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர். அடுத்தாக காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
நேற்று திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில், அவரது தம்பி நவீன் குமார், கோயில் ஊழியர்கள் பிரவீன் குமார், வினோத் குமார், கோயில் கார் ஓட்டுநர் கார்த்திகேயன், மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்கள். இந்த விசாரணை மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. இவர்கள் அனைவரும் இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களாக கருதப்படுகின்றது.
இதனையடுத்து சிபிஐ விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையானது இன்றும் தொடங்கியது. அந்த வகையில் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்ற இடங்களிலும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவ தினத்திற்கு முந்தைய நாள் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் எங்கே அழைத்து செல்லப்பட்டனர் எஎன விசாரணை நடத்தினர். இதுவரை 3 இடங்களில் மட்டுமே சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், 4 வதாக ராமேஸ்வரம்- திருப்புவனம் சாலையில் உள்ள பேக்கரிக்கு அஜித்குமார் மற்றும் அவரது தம்பி நவீன் குமாரை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படும் இடத்தில் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் சிபிஐ அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாரிடம் வன்னிக்கோட்டை புளியதோப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடைய கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள ஐந்து காவலர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் அவற்றை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு, சம்பவத்தின் போது நடந்த தகவல் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களை வெளிப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.