
நாமக்கல்
நாமக்கல் அருகே லாரி மீது கார் அதிவேகத்தில் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலத்த காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், பரமத்தியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (35). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று ஒரு காரில் சென்னையில் இருந்து நாமக்கல் வழியாக குடும்பத்தினருடன் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவர்களது கார் நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரனின் மனைவி பிரியா (28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல ரவிச்சந்திரன், அவரது ஆறு மாத கைக்குழந்தை சான்யா, மற்றொரு குழந்தை சாலினி (5), மாமியார் சந்திரா (47) ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.