மூதாட்டியை நயவஞ்சகமாக ஏமாற்றி பணம் திருட்டு... மனைவியை பார்க்கவந்த இடத்தில் கர்நாடக இளைஞர் கைவரிசை... 

First Published Apr 25, 2018, 8:06 AM IST
Highlights
karnataka youth cheated grandma and theft


நாகப்பட்டினம் 

நாகப்பட்டினத்தில், 65 வயது மூதாட்டியை நயவஞ்சகமாக ஏமாற்றி ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.1000-ஐ பணத்தை எடுத்த கர்நாடகவைச் சேர்ந்த இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தென்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டு (65). இவர் திருக்குவளையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக அங்குள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி பட்டுவிடம் இருந்து ஏ.டி.எம். கார்டையும், இரகசிய எண்ணையும் பெற்றுக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதுபோல நடித்து பட்டுவின் கணக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். 

மேலும், பட்டுவின் ஏ.டி.எம் கார்டை தனது கையில் மறைத்து வைத்துக்கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்றொருவர், நடந்த சம்பவம் பற்றி பட்டுவிடம் கூறினார். உடனே பட்டு இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த நிலையில் அந்த மர்ம நபர், அந்த வங்கிக்கு அருகே உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் பட்டுவின் கணக்கில் இருந்து ரூ.1000-தை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

உடனே வங்கி அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் போலி ஏ.டி.எம். கார்டுகளை வைத்து வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து வங்கி அதிகாரிகள் அவரை திருக்குவளை காவல் உதவி ஆய்வாளர் சௌந்தரராஜனிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில் அவர், கர்நாடக மாநிலம், பெங்களூரு மாச்சா அல்லி கேட் மாகடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (24) என்பது தெரியவந்தது.

மேலும், திருக்குவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது, சுரேஷ்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதும் தற்போது அந்த பெண் திருக்குவளையில் உள்ளதால் அவரை பார்க்க வந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

சுரேஷ்குமார் இதுபோல பல்வேறு இடங்களில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதுகுறித்து திருக்குவளை காவலாளர்கள் வழக்குப்பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் சுரேஷ்குமாரிடம் இருந்து பட்டு கணக்கில் இருந்து எடுத்த ரூ.1000 மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகளையும்  காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.  

click me!