சென்னையில் சொகுசு கார் மோதி தொழிலாளி பலி -போதை ஆசாமிகள் ஓட்டம்

First Published Dec 18, 2016, 1:30 PM IST
Highlights


குடிபோதையில் வந்த சொகுசு கார் மோதி கூலி தொழிலாளி பலி - தொடரும் போதை பார்ட்டிகள் அட்டகாசம்

சனிக்கிழமை இரவு வந்தாலே சாலையில் உறங்கும் மக்களும் பயணம் செய்பவர்களும் உயிரை கையில் பிடித்து கொண்டு போகும் நிலை.இரவு முழுதும் ஸ்டார் ஓட்டல் பப்புகளில் ஆட்டம் போடும் பார்ட்டிகள் , கடுமையான போதையுடன் காரில் நகாரில் உலா வருகின்றனர். 

இதில் சிறு சிறு விபத்துகள் ஏற்படுத்துபவர்கள் பற்றிய செய்தி வெளியே வருவதில்லை. விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படும் போதுதான் உண்மை வெளியே வருகிறது. ஷாஜி,  ஆடி ஐஸ்வர்யா, அருண் விஜய், கார்பந்தய வீரர் விக்னேஷ் வரிசையில் நேற்றிரவு குடிபோதையில் சொகுசு காரில் வந்தவர்கள் மோதியதில் நடைபாதையில் உறங்கிய தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சென்னை வடபழனி கோவில் அருகில் நேற்று இரவு பாஸ்கரன்(55) என்பவர்  பணி முடித்து சாலையோரம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அநத வழியாக வந்த சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் உயிர் இழந்தார்.  

 காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உடன்வந்தவர்  காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  உயிரிழந்த பாஸ்கர்  உடல் பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில்  இதே போல் கடந்த சில நாட்களில் குடிபோதை வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மது போதையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்கும் போலீசார் ஏனோ பெரிய சொகுசு கார்களில் வரும் ஆட்களை பிடிப்பதில்லை. 

click me!