கார்கள் நேருக்குநேர் மோதல்... 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!

By vinoth kumarFirst Published Feb 4, 2019, 9:45 AM IST
Highlights

வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வேப்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜபதி, சரவணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒரு காரில் சாமி தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு  மீண்டும் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது அந்த கார், ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின.

இந்த கோர விபத்தில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஐடி ஊழியர் நவீன் சாமுவேல், பூபதி உள்ளிட்ட 4  பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். மற்றொரு காரில் வந்த பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜபதி, சரவணன், பாலகிருஷ்ணன்  ஆகியோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!