நீண்ட காலமாக பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவந்த அண்ணன், தம்பி கைது; 55 சவரன் நகைகள் பறிமுதல்....

First Published May 2, 2018, 11:02 AM IST
Highlights
Brothers arrested for theft jewels from women for long time


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் வெவ்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவந்த மதுரையைச் சேர்ந்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 55 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயம்புத்தூர், செல்வபுரம் காவலாளர்கள் தெலுங்குபாளையம் பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  அந்த வழியாக வந்துக் கொண்டிருந்த இருவரை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரித்தனர். 

அந்த விசாரணையில், அவர்கள் மதுரை வண்டியூரைச் சேர்ந்த நாகராஜனின் மகன்களான ஐயனார் (28),  மணிமாறன் (25) எனவும் தெரிந்தது. 

மேலும், இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளான குனியமுத்தூர், போத்தனூர், ரேஸ்கோர்ஸ், சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ராமநாதபுரம், பீளமேடு ஆகிய பகுதிகளில் பெண்களிடம்  நகைப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, காவலாளர்கள் இவர்கள் இருவரையும் கைது செய்து 55 சவரன் நகைகளை மீட்டனர்.   

பின்னர், இவர்களை பற்றி காவலாளர்கள், "கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பூச்சியூரில் இந்த சகோதரர்களும்,  மேலும் மூன்று பேரும் சேர்ந்து அறை எடுத்துத் தங்கி இருந்தனர். 

இக்கும்பல் கோவை மாநகரப் பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம்  நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏற்கெனவே,  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு முன் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவலாளர்கள் கைது செய்தனர். 

அவர் கொடுத்த தகவலை அடுத்து இந்த இருவரையும் காவலாளார்கள் கைது செய்துள்ளனர்.  மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். ஐயனார், மணிமாறன் ஆகியோர் மீது மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில்  கொலை வழக்கு நிலுவையில் உள்ளது" என்று காவலாளர்கள் தெரிவித்தனர். 
 
 

click me!