சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை ஆட்டோ மீது சொகுசுக் கார் மோதியதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய சொகுசுக் கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த சர்வதேச கார் பந்தய வீர்ர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் நேற்று நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் அதே போன்றதொரு விபத்து ஏற்பட்டுள்ளது.
வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை ஆடி கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்த்து. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பயங்கர வேகத்துடன் மோதியது. இதில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தி, எல்லம்மாள் ஆகிய இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் தொழிலதிபர் ஒருவரின் மகளான ஐஸ்வர்யா என்பவர் ஓட்டி வந்த ஆடி கார் மோதியதில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
சில மாதங்களுக்குப் முன்பு மவுண்ட் ரோட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் மீது சொகுசு கார் மோதியது.இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் விபத்தில்லாதே நாளே இல்லை.
சிங்காரச் சென்னையின் சாலைகள் சமீபகாலமாக காஸ்ட்லி கார்களின் விபத்துக்களமாக மாறியிருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. காஸ்ட்லி காரில் போனாலும் உங்கள் உயிரும் காஸ்ட்லி தானே….