மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில் நிர்வாகத்தை இழிவு படுத்த நில உரிமையாளர் முயற்ச்சித்து வருவதாகவும், நில உரிமையாளருக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் ஆஷ்ரம் பள்ளி தரப்பு வழக்கறிஞர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி சங்கம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர். ராகவேந்திரா ஆஸ்ரமம், வெங்கடேஸ்வரலு என்பவரின் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
பள்ளி கட்டட வாடகை, 5 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய், வாடகை பாக்கி உள்ளதாகவும், அதனால் கட்டடத்தைக் காலி செய்ய சொல்லியும் நிலத்தின் உரிமையாளர் கூறி வந்ததாகவும் தெரிகிறது.
இதைதொடர்ந்து ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஸ்ரமம் பள்ளி கட்டடத்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியானது.
மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்கள், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் குறித்து பரவி வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் விரைவில் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதைதொடர்ந்து, ஆஷ்ரம் பள்ளி தரப்பு வழக்கறிஞர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளி நிர்வாகத்தின் மீது நில உரிமையாளர் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் மாத மாதம் வாடகை செலுத்தி வரும் நிலையில் நிர்வாகத்தை இழிவு படுத்த நில உரிமையாளர் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நில உரிமையாளருக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் மாற்று இடம் எங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்தார்.