சென்னையில் கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் கிரிக்கெட் பொட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முன்பு பல்வேறு அமைப்புகளின் சார்பில் கடந்த மாதம் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில், காவலரை ஒருவர் தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுயத்தியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கில், அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். மற்ற 3 வழக்குகளில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், தான் போராட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டதாகவும், தனக்கு எதிராகக் காவல் துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே இந்த வழக்கில் பலர் முன்ஜாமீன் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.